|
Home
பாகம் :
2/5
இப்பொய்யர்களின் முன்னோர்கள் பற்றி திருக்குர்ஆன்.
எந்த சமுதாயமும் தனக்கு அனுப்பப்பட்ட நபிமார்களை பொய்ப்பிக்காமல்
இருந்ததில்லை. ஒவ்வொரு காலகட்டத்திலும் அச்சமூட்டி எச்சரிக்கை செய்யும்
இறைதூதுச் செய்தியை அவர்கள் சொல்லும் போது ஒரு குறிப்பிட்ட வர்க்கம்
அவர்களை பொய்யர்கள் என்று கூறி எதிர்க்கவே செய்துள்ளனர். அல்லாஹ்வின்
வழிகாட்டலை அலட்சியம் செய்து பரிகசித்தோர் அழிந்த வரலாறுகளையே நாம்
அறிகிறோம். இதைத்தான் திருமறைக் குர்ஆன் கீழ்க்காணும் வசனங்களில் தெளிவாக
எடுத்துரைக்கிறது.
திடமாக இந்த குர்ஆனில் மனிதர்களுக்குப் பலவிதமான உவமானங்களையும் நாம்
கூறியிருக்கிறோம். ஆயினும் நீர் எந்த ஓர் அத்தாட்சியை அவர்களிடம் கொண்டு
வந்த போதிலும்; ''நீங்கள்
எல்லோரும் வீண் பொய்யர்களே அன்றி வேறில்லை''
என்று நிராகரிப்வோர் நிச்சயமாக கூறுவார்கள்.
(திருக்குர்ஆன்
30 : 58)
நபியே! இவர்கள் உம்மைப் பொய்யாக்க முற்பட்டால் (அதற்காக விசனப்படாதீர்;
ஏனெனில்) நிச்சயமாக இவர்களுக்கு முன்னால் நூஹுடைய சமூகத்தினரும்;
ஆது,
ஸமூது சமூகத்தினரும் தத்தம் நபிமார்களைப் பொய்ப்பிக்கவே முற்பட்டார்கள்.
இவ்வாறே இப்றாஹீமுடைய சமூத்ததினரும் லூத்துடைய சமூகத்தினரும்
பொய்ப்பிக்கவே முற்பட்டார்கள். இவ்வாறே மத்யன் வாசிகளும் முற்பட்டனர்.
இன்னும் மூஸாவையும் பொய்ப்பிக்வே முற்பட்டனர். எனினும் நான்
காஃபிர்களுக்கு அவகாசம் கொடுத்துப் பின்னர் அவர்களை நான் பிடித்துக்
கொண்டேன்;.
என் தண்டனை எப்படியிருந்தது?
(என்பதை
கவனிப்பீராக!)
(திருக்குர்ஆன்
22 : 42,43,44)
மேலும் இவர்களுக்கு முன்னிருந்த ஏனைய சமூகத்தவர்களும் இவ்வாறே
பொய்ப்பிக்க முற்பட்டனர்,
அன்றியும் அவர்களுக்குக் கொடுத்ததில் பத்தில் ஒன்றைக் கூட இவர்கள்
அடையவில்லை. ஆகவே அவர்கள் என் தூதர்களைப் பொய்ப்பிக்க முற்பட்டார்கள்;
அந்த நிராகரிப்பு (கடின வேதனையைக் கொண்டு வருவதாக) எவ்வாறு இருந்தது
(என்பதை இவர்கள் நினைவு கூறட்டும்)
(திருக்குர்ஆன்
34 : 45)
(நபியே!)
உமக்கு முன்னர் வந்த தூதர்களும் நிச்சயமாக (இவ்வாறே) பரிகசிக்கப்பட்டனர்;
முடிவில் அவர்கள் எதைப் பரிகசித்துக் கொண்டிருந்தனரோ அதுவே
பரிகசித்தவர்களை வந்து சூழ்ந்துகொண்டது.
''பூமியில்
நீங்கள் சுற்றி வந்து, (அல்லாஹ்வின்
வசனங்களைப்) பொய்ப்பித்தவர்களின் முடிவு என்ன ஆயிற்று என்பதை நீங்கள்
கவனித்துப் பாருங்கள்''
என்று (நபியே!) நீர் கூறுவீராக.
(திருக்குர்ஆன்
6 : 10,11)
உண்மைக்கும் நேர்மைக்கும் ஓர் அழகிய முன்மாதிரி
இஸ்லாத்தின் கொள்கைகளை தங்களின் சூழ்ச்சிகளால் வென்றெடுக்க இயலாது என்பதை
மக்கத்து (இறை) நிராகரிப்பாளர்கள் உணர்ந்தே இருந்தனர். முஹம்மது (ஸல்)
அவர்கள் இறைசெய்தி என்று கூறுவது அனைத்தும் அவர்களின் சொந்த கருத்தல்ல
மாறாக அனைத்துலகையும் படைத்த அல்லாஹ்வினால் அருளப்படும் இறைசெய்தியே
என்பதை அறிந்து கொண்ட அக்குறைஷித் தலைவர்கள் முஹம்மது (ஸல்) அவர்களிடம்
ஒரு நிபந்தனையின் அடிப்படையில் அவர்கள் அனைவரும் இத்தூய இஸ்லாத்தை
ஏற்றுக்கொள்வதாக தெரிவித்தனர். நிபந்தனை என்னவெனில் அக்குறைஷித்
தலைவர்கள் இஸ்லாத்தை ஏற்றபின் அவர்கள் இருக்கும் அவையில் தாழ்ந்த
குலத்திலிருந்து இஸ்லாத்தை ஏற்றவர்கள் அவர்களோடு அமர்ந்துவிடக்கூடாது
என்கின்றனர். முதலில் இந்நிபந்தனையை ஏற்றுக்கொண்டு அக்குறைஷித் தலைவர்களை
இஸ்லாத்தை ஏற்கச்செய்யலாம். பின்னர் இஸ்லாத்தின் சீரிய கொள்கைகளை
அறிந்தபின் தங்களின் நிபந்தனையின் தவறை தாங்களாகவே உணர்ந்து விளக்கிக்
கொள்வார்கள் என்ற முடிவு நபி (ஸல்) அவர்களின் எண்ண ஓட்டத்தில் இருந்தது.
அந்த தருணத்தில் குறைஷிகளின் தாழ்ந்த குலத்திலிருந்து இஸ்லாத்தை ஏற்ற
அப்துல்லாஹ் பின் உம்மி மக்தூம் (ரழி) என்ற கண்பார்வையற்ற ஒரு நபித்தோழர்
அவ்வவைக்கு வந்து நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு ஸலாம் உரைக்கிறார்கள்.
இதை சற்றும் எதிர்பார்க்காத நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இவர்
போன்றவர்கள் தாங்கள் அமர்ந்திருக்கும் சபைக்கு வரக்கூடாது என்ற
நிபந்தனையைப் பற்றித்தானே குறைஷித்தலைவர்கள் பேசிக்கொண்டிருக்கிறனர்.
இந்த நேரத்தில் இவர் அவைக்கு வருகிறாரே என்று முகம் சுளிக்கின்றனர்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் முகம் சுளித்தது கண்பார்வையற்ற
அந்நபித்தோழருக்கு தெரியாது. இருப்பினும் இறைவன் புறத்திலிருந்து
கடுமையான வாசகங்களோடு எச்சரிக்கை வருகிறது.
'அவர்
கடுகடுத்தார்,
மேலும் (முகத்தைத்) திருப்பிக் கொண்டார்'
என்று துவங்கும் அபஸ என்ற அத்தியாயத்தின் முதல்
12
வசனங்களை அல்லாஹ் அருளினான். அக்குறைஷித் தலைவர்களுக்காக ஒரு
இறைவிசுவாசியிடம் முகத்தைத் திருப்பிக்கொள்கிறீர். இஸ்லாத்தை
புறக்கணிக்கும் அந்நிராகரிப்பாளரை நேசங்கொண்டு ஒரு இறைவிசுவாசியை
புறக்கணிக்கிறீர் என்று நபி (ஸல்) அவர்களைக் கண்டிக்கிறான். தங்களின்
திட்டத்தை உடனடியாகக் கைவிடுகிறார்கள்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நினைத்திருந்தால் தன்னை கடுமையாக
கண்டிக்கும் இவ்வசனங்களை மறைத்திருக்கலாம். தனது சுயகௌரவத்தை பாதிக்கும்
வகையில் இறங்கிய இவ்வசனங்களையும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்தான்
இவ்வுலகிற்கு எடுத்துரைக்கிறார்கள். தனது தோழர் அப்துல்லாஹ் பின்
உம்மி மக்தூம் (ரழி) அவர்களிடம் முகம் சுளித்த அத்தவறுக்காகத்தான்
இவ்வசனங்கள் இறங்கியது என்ற காரணத்தையும் கூறுகிறார்கள். இவ்வசனம்
இறங்கிய பின்னர் அப்துல்லாஹ் பின் உம்மி மக்தூம் (ரழி) அவர்களிடம் தனது
மதிப்பை அதிகப்படுத்தினார்கள். இப்படிப்பட்ட உண்மைக்கும் நேர்மைக்கும்
இலக்கணமாய் திகழ்ந்தவர்களை,
அகில உலகிற்கும் அழகிய முன்மாதிரியை எந்த அடிப்படையும் இல்லாமல் பொய்யன்
என்று தூற்றுகிறார்கள் என்றால் நாம் இவர்களை என்ன சொல்வது?
இவர்கள் யாரைப் பொய்யன் என்று சொல்கிறார்கள்?
இன்றைய உலகில் கடவுளின் பெயரால் ஏய்ப்பவர்கள் அனைவரின் பின்னும்
பேராசையும் பணவெறியுமே குடிகொண்டுள்ளது. முஹம்மது (ஸல்) அவர்கள் பொய்யர்
என்றால்,
கடவுளின் பெயரால் அவர்கள் கற்பனை செய்து பொய் சொல்லினார் என்றால் அதற்கு
நிச்சயம் ஒரு எதிர்பார்ப்பு இருக்க வேண்டும். தனது
25
வயதில் வணிகராகவும்
40
வயதில் பெரும் செல்வந்தராகவும் இருந்த நபி (ஸல்) அவர்கள்,
இஸ்லாத்தை பிரச்சாரம் செய்த காரணத்தால் தன் செல்வங்கள் அனைத்தையும்
இழக்கிறார்கள். தனது உயிருக்கு குறிவைக்கப்பட்டு மதினாவிற்கு
வெறுங்கையோடு விரட்டப்படுகிறார்கள். இவ்வுலகில் எந்த மடையனாவது ஒரு
பொய்யைச் சொல்லி தன் சொத்துக்கள் அனைத்தையும் இழக்க முன்வருவானா?
தனது உயிர் போகும் அளவிற்கு துன்புறுத்தப்படும் போதும் அப்பொய்யிலேயே
அவன் நிலைத்திருப்பானா?
உடுத்த ஆடையோடு ஊரைவிட்டும் விரட்டியபோதும் தன் பொய்யில் பிடிவாதமாக
இருப்பானா?
சற்று சிந்தியுங்கள்.
மக்காவிலிருந்து விரட்டப்பட்ட அவர்கள் மதினா சென்ற பிறகு அவர்களின்
கைகளில் ஆட்சி அதிகாரம் வருகிறது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஆன்மீகத்
தலைமையும் அரசியல் தலைமையும் ஒருசேரப் பெறுகிறார்கள். பைத்துல்மால்
என்னும் அரசுக்கருவூலத்திற்கு நிதிகளும் கனிவர்க்கங்களும் வந்து
குவிந்தது. ஒரு நாள் சிறு வயது தனது பேரக்குழந்தை ஹஸன் (ரழி)
அரசுக்கருவூலத்தில் இருந்த ஒரு பேரீத்தம் பழத்தை தனது வாயில்
விட்டுவிடுகிறார். இதைக்கண்ட நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்
பேரக்குழந்தையின் வாயில் தன்விரலை விட்டு பேரீத்தம் பழத்தை வெளியே
துப்பச்செய்து
'அப்பேரீத்தம்
பழம் அரசாங்கத்தின் சொத்து தமக்குச் சொந்தமானதல்ல'
என்று அறிவுறுத்துகிறார்கள். இத்தகைய நேர்மையாளரையா இவர்கள் பொய்யன்
என்று சொல்கிறார்கள்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மன்னராக ஆட்சி அதிகாரத்திலிருந்தும் அரண்மனை
சுகம் காணாமல் இறுதி வரை குடிசையிலேயே வாழ்ந்து குடிசையிலேயே
மரணிக்கிறார்கள். இந்த சத்திய இஸ்லாத்தைச் சொல்லி தனக்காக எந்த
நிலையிலும் செல்வம் திரட்டவில்லை. அவர்களின் குடும்பத்தினர் அன்றாடம்
வயிரார உண்டதில்லை. மூன்று நாட்கள் தொடர்ந்து அவர்கள் வீட்டில்
அடுப்பெறிந்த சரித்திரமில்லை. பல நாட்கள் பட்டினியோடும்,
உண்ண உணவின்றி வெறும் பேரீத்தம் பழத்தையும் தண்ணீரையுமே உணவாக
உட்கொள்ளும் அளவிற்கு ஏழ்மை நிலையிலே வாழ்ந்தார்கள். தனது கவச ஆடையை தன்
உணவிற்காக அடமானம் வைத்து அதை மீட்க முடியாத ஏழ்மை நிலையிலேயே அன்றைய
மாமன்னராகத் திகழ்ந்த நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மரணிக்கின்றார்கள்.
இத்தகைய பண்பாடுமிக்க சரித்திர நாயகரைத்தான் இவர்கள் பொய்யன் என்று
சொல்கிறார்கள். இப்படி பட்டனி கிடந்து நோவதற்காகவா ஒருவர் பொய் சொல்ல
வேண்டும்?
நம் இந்திய நாட்டில் ஒருவன் எம்.எல்.ஏ ஆகிவிட்டாலே அவன் போடும்
கூத்துக்களைப் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம். அன்றைய உலகில்
கோலோச்சியிருந்த ரோமாபுரியும் பாரசிகமும் கண்டு நடுங்கிய முஹம்மது (ஸல்)
என்ற மாமன்னருக்கு பல்லாக்கு இல்லை,
வாயிற்காப்போன் இல்லை. அவர்களுக்கு முன் பின் அடியாட்கள் இல்லை. எவரையும்
தனது காலில் விழுவதற்கு அவர்கள் அனுமதித்ததில்லை. மனிதன் காலில் மனிதன்
விழும் கலாச்சாரத்தை முற்றிலுமாக ஒழித்தார்கள். தனக்காக யாரும் எழுந்து
மரியாதை செலுத்தக்கூடாது என்றார்கள். மிகச்சாதாரண மனிதன் எதிர்பார்க்கும்
புகழைக்கூட வெறுத்தார்கள். கிருத்தவர்கள் ஈஸா (அலை) அவர்களை வரம்புமீறி
புகழ்ந்தது போன்று என்னை புகழ்ந்து விடாதீர்கள் என்று எச்சரித்தார்கள்.
இத்தகைய சீர்திருத்தச் செம்மலைத்தான் இவர்கள் பொய்யன் என்று
சொல்கிறார்கள்.
இவர்களின் நரகல் நடைவிமர்ச்சனங்களை பார்வையிடும் நடுநிலையாளர்கள் எவரும்
'மல்லாந்து
படுத்து காரிக்காரி உமிழும் அறிவிலிகளே! உங்கள் மடமைத்தனத்திற்கு ஒரு
எல்லையே இல்லையா?
பார் போற்றும் இம்மனிதப் புனிதரையா நீங்கள் பொய்யன் என்று சொல்கிறீர்கள்?
கண்ணாடி முன்னின்று உங்களின் கோர முகத்தை பார்த்துவிட்டா
'முஹம்மது
ஒரு பொய்யன்'
என எழுதினீர்கள்?'
என்று இவர்களைக் காரி உமிழ்வார்கள்.
சாட்டையடிகள் மேலும் தொடரும் இன்ஷா அல்லாஹ்...
|